search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

    திருடிய பணத்தை பங்கு போடுவதில் தகராறு, திருப்பூரில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை - நண்பர்கள் 3 பேர் கைது

    போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சரவணனை அவரது நண்பர்கள் நன்னுபிரசாத்(24), சித்திக் பாஷா( 30), மனோஜ்(21) ஆகிய 3 பேரும் சேர்ந்துதான் கொலை செய்தது தெரியவந்தது.
    திருப்பூர்:

    மதுரையை சேர்ந்தவர் சரவணன் (வயது27). இவர் திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி இருந்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.  இந்தநிலையில் அவர் திருப்பூர் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் பாட்டிலால் கழுத்து அறுபட்ட நிலையிலும் தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். 

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சரவணன் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

    போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சரவணனை அவரது நண்பர்கள் நன்னுபிரசாத்(24), சித்திக் பாஷா( 30), மனோஜ்(21) ஆகிய 3 பேரும் சேர்ந்துதான் கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளியை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர் அனில் குமார், இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். 

    அப்போது கொலையாளிகள் 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று மூன்று பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மூன்று பேரையும் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குடிபோதையில் இருந்த ஒருவரிடம் இருந்து 4 பேரும் பணத்தை திருடி உள்ளனர். 

    அந்த பணத்தை பங்கு போடும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சரவணனை குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×