search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பொருட்கள் வாங்கிய மக்கள்
    X
    பொங்கல் பொருட்கள் வாங்கிய மக்கள்

    சென்னையில் பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் மக்கள் கொரோனாவை முற்றிலுமாக மறந்து இருந்ததை கடைகளில் காண முடிந்தது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி கடை வீதிகளில் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் பெருமளவில் திரண்டனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி தேவைப்படும் பொருட்களான கரும்பு, மஞ்சள் குலை, பச்சரிசி, வெல்லம், தோரணங்கள், பூ உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.

    மிகுந்த உற்சாகத்தோடு பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

    இதன் காரணமாக தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், மாதவரம், செங்குன்றம், மடிப்பாக்கம், குரோம்பேட்டை, திருவெற்றியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பெண்கள் பலர் கடைகளை அமைத்து
    பொங்கல்
    பொருட்களை விற்பனை செய்தனர்.

    மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றிலும் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர். இதன் காரணமாக கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதையொட்டி கடை வீதிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருந்தனர்.

    தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிக்கொண்டே இருந்தனர்.

    பழக்கடைகளிலும் பழங்களை வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதே போன்று காய்கறி கடைகளிலும் மக்கள் திரண்டு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    அதே போன்று ஜவுளி கடைகளில் புத்தாடைகளை எடுப்பதற்கும் மக்கள் கூடினார்கள்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று வழக்கம்போல மக்கள் அதிகளவில் திரண்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது போன்று ஆயிரக்கணக்கான மக்கள் ரங்கநாதன் தெருவுக்கு சென்று புத்தாடை மற்றும் பொருட்களை வாங்கினர்.

    ரங்கநாதன் தெருவையொட்டி சாலையோரமாக உள்ள சிறிய கடைகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் மக்கள் கொரோனாவை முற்றிலுமாக மறந்து இருந்ததை நேற்று காண முடிந்தது.

    இன்று மாலையிலும் கடை வீதிகளில் அதிக கூட்டம் காணப்படும் என்பதால் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    Next Story
    ×