search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    த.மா.கா. பொதுச்செயலாளர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்

    த.மா.கா. பொதுச்செயலாளர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மறைவு தனிப்பட்ட முறையிலே எனக்கும், கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ்.ராம் பாபு திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    மதுரை மக்களவைத் தொகுதியில் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக ராம்பாபு ஆற்றிய ஏராளமான பணிகள் தான் இன்றைக்கு மதுரை தொகுதி பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை குறிப்பிடுகிறேன்.

    தமிழகத்தில் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். பிறகு 1996-ல் மூப்பனார் தலைமையை ஏற்றும், 2014-ல் எனது தலைமையிலும் த.மா.கா.விற்கு வலுசேர்த்தவர். தென் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்றவர்.

    அனைத்து கட்சியினராலும் மரியாதைக்குரியவராக கருதப்பட்டவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகியவர். இளம்வயது முதலே அவர் மேற்கொண்ட இயக்கப்பணியாலும், மக்கள் நலப்பணியாலும் பாராட்டப்பட்ட நல்ல மனிதர்.

    60 வயதுடைய ராம்பாபு மறைவு தனிப்பட்ட முறையிலே எனக்கும், த.மா.கா.வுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், த.மா.கா.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×