
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே கூட்டுறவு நிறுவனமாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விளங்குவதோடு, அந்த ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கான அரவைப் பருவத்தில் போதிய மழையின்மைக் காரணமாகவும், கரும்புப் பதிவு குறைவாக இருந்ததன் காரணமாகவும் மேற்படி ஆலையை இயக்க முடியாத சூழ்நிலை நிலவியது.
2021-2022-ம் ஆண்டிற்கான அரவைப் பருவத்திற்கு இந்த ஆலையை திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், ஆலை பராமரிப்பு, ஊதிய நிலுவை என கிட்டத்தட்ட ரூ.22 கோடி அளிக்க வேண்டுமென்றும் ஆலை நிர்வாகத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலை தொடர்ந்து இயங்கும் வண்ணம் 60,000 டன் பதிவு செய்யப்பட்ட கரும்புகளும், 17,000 டன் பதிவு செய்யப்படாத கரும்புகளும் அரவைக்கு தயார் நிலையில் உள்ளதால் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலையை இயக்குவதன் மூலம் 10,000 கரும்பு விவசாயிகளும், 500 தொழிலாளர்களும் நேரடியாக பயன் பெறுவர் என்பதோடு, கரும்பு வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி இயக்குபவர்களும், அதைச் சார்ந்த தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பயன் பெறுவார்கள்.
மேற்படி அதன் ஆலையை இயக்க அரசு நிதியுதவி புரிய வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
எனவே, கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.