
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த டி23 என்ற புலி 4 பேரை அடித்து கொன்றது.
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இணைந்து புலியை பிடிக்கும் பணியை தொடங்கினர்.
ஆனாலும் புலி வனத்துறையினர் கண்ணில் சிக்கினாலும், பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. நீண்ட நாட்கள் போராடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
புலியை பிடித்தபோது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக புலிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.
அதன்படி இரும்பு கூண்டில் புலியை அடைத்து கர்நாடக மாநிலம் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அந்த புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புலி நன்கு குணம் அடைந்தவுடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்நீரஜ் குமார் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சென்றார். அங்கு ஆட்கொல்லி புலியின் உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்து, புலியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஆட்கொல்லி புலிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்டபோது மெலிந்து காணப்பட்ட புலி தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதன் உடல் எடை 200 கிலோ அதிகரித்துள்ளது. உடலில் இருந்த 2 பெரிய காயங்கள் குணம் அடைந்து விட்டன. சில இடங்களில் உள்ள காயங்கள் குணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவக் குழுவினரின் உத்தரவுக்கு அந்த புலி கட்டுப்படுகிறது. இருந்த போதிலும் அதன் ஆக்ரோஷம் இன்னும் மாறவில்லை. எனவே அந்த புலி இரும்புக் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 கிலோ மாட்டிறைச்சி சாப்பிடுகிறது. அடிக்கடி பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி அந்த புலிக்கு எந்தவித தொற்றும் ஏற்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.