search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை குடிநீர் ஏரிகள் 94 சதவீதம் நிரம்பியது

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி இதில் 3,139 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 235 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 687 கன அடி வெளியேற்றப்படுகிறது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. ஏற்கனவே ஏரிகள் அனைத்தும் முழுகொள்ளளவை நெருங்கி இருந்ததால் ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அனைத்து குடிநீர் ஏரிகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது நிலவரப்படி ஏரிகளில் 11 ஆயிரத்து 139 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 94 சதவீதமாகும்.

    தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி இதில் 3,139 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 235 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 687 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 853 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 161 கன அடி தண்ணீர் வருகிறது. 265 தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,423 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 495 கன அடி நீர் வருகிறது. 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 3,118 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 1,117 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுக்கொள்ளளவான 500 மி.கன அடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 188 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×