search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    தி.மு.க.வினர் காவல் துறையினரை மிரட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தவும்- முதல்வருக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

    கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய அவல நிலை உருவாகி உள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து வருவதையும், பட்டப் பகலில் கொலைகள், கொள்ளைகள் அன்றாடம் நடைபெற்று வருவதையும், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், இன்னும் சொல்லப் போனால் காவல் துறையினரும் தி.மு.க. வினரால் தினந்தோறும் மிரட்டப்படுவதையும், அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் தி.மு.க.வினரின் தலையீடு தலை விரித்து ஆடுவது பற்றியும் நான் எனது அறிக்கைகள் வாயிலாக சுட்டிக்காட்டி இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சரை பல முறை வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

    ஆனால் ஒருவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சட்டம்- ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது. கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒட்டு மொத்த தமிழர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய அவல நிலை உருவாகி உள்ளது. காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.

    வேலூர் மாவட்டம், வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் ஒரு ஒலிநாடா செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தான் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக பணிபுரிவதாகவும், ஏலச் சீட்டு மோசடி சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக்கூடாது என தி.மு.க. பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், வழக்குப்பதி யாததற்கு உரிய காரணத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதாகவும், மணல் கடத்தினால் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று சில தி.மு.க. பிரமுகர்கள் தொல்லைக் கொடுப்பதாகவும், இதன் காரணமாக மன உளைச்சல் அதிகமாகி உள்ளதாகவும், எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த சார் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

     

    திமுக

    இந்தச் செய்தி சமூக வலை தளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஒரு காவல் சார் ஆய்வாளரே இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்றால், மற்றவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. குற்றம் செய்வதைத் தடுப்பது காவல் துறையினரின் பணி. ஆனால் காவல் துறையினரையே குற்றம் செய்யத் தூண்டுகிறது தி.மு.க.

    குற்றங்களைக் கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவதும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதும், அதன் மூலம் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதும் தான் காவல் துறையின் தலையாய கடமை. இதுதான் மக்கள் அச்சமின்றி தங்களது அன்றாடப் பணிகளை கவனிக்க வழிவகை செய்யும்.

    2021-2022 ஆம் ஆண்டிற்கான காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தீய சக்திகளை ஒடுக்கி பொது மக்களை காப்பாற்ற தமக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவான வழிமுறைகளை பின்பற்றி காவல் துறை திடமாகவும், முதிர்ச்சியுடனும், பொறுமையுடனும் செயல்பட்டு பொது அமைதியை அச்சுறுத்திய பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது.

    காவல்துறையினர் சட்ட விதிகளை பேணிப் பராமரிக்க சுதந்திரமாக செயல் படும் வகையில் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆனால் இதற்கு முற்றிலும் முரணான நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. கடந்த 8 மாத காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது தெள்ளத் தெளிவாகிறது.

    பொது அமைதிக்கான அச்சுறுத்தலும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்படாத நிலையும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என்பதை காவல் துறை சார் ஆய்வாளரின் ஒலிநாடா செய்தி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    சட்டம்- ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்- அமைச்சரின் துறையிலே இது போன்ற அராஜகம் என்றால் மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறும் பதம்’ என்பது போல இதுபோல் எத்தனை அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். தி.மு.க.வினரின் இதுபோன்ற அராஜகச் செயலுக்கு சட்ட விரோத செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படாதவர் கொஞ்சம், கொஞ்சமாகத்தன் நாட்டை இழப்பார் என்ற திருக்குறளை மனதில் நிலை நிறுத்தி, தி.மு.க.வினர் அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கை நிலை நாட்டவும், மக்கள் தங்கள் பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளவும், சார் ஆய்வாளர் சீனிவாசனை மிரட்டிய தி.மு.க.வினரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத்தரவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க வும் உறுதியான நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு

    Next Story
    ×