search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை.

    அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது.

    கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம்.

    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. என்னுடன் நம் அமைச்சர் பெருமக்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் என்று பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதை மறக்கவே முடியாது. அதனால் குறைந்த கால அளவிலேயே இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது.

    தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்திய போது அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்டீர்கள். உங்ளுடைய ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கொரோனா பரவலையும் இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒரு ஒத்துழைப்பைத்தான் இந்த புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன்.

    கொரோனா வைரஸ்


    கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்போது ஒமைக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு தேவையான எல்லா நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வருபவர்களுக்கான பரிசோதனை, நம் மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கிறது. கூடுதல் தேவையை யோசித்தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற்பாடுகளை செய்திக்கிறோம். அதனால் நீங்கள் யாரும் பயப்படத்தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவைப்படுகிறது.

    ஒமைக்ரான் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டிருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத்தான். அந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

    கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அவசர தேவைகள், அன்றாட பணிகளுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியை கடைபிடியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாக கையை கழுவுங்கள். முக கவசத்தை கட்டாயம் பொதுவெளியில் போட்டுக் கொள்ளுங்கள். இதை எப்போதும் மறந்து விடாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உங்களை சார்ந்திருக்கக் கூடிய அனைவருடைய பாதுகாப்பிற்காகத்தான்.

    தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் டோஸ் போட்டவர்கள், உங்களுக்கு சொல்லப்பட்ட தேதியில் 2-வது டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்.

    இந்த (ஜனவரி) மாதத்தில் இருந்து மத்திய அரசு, 15 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தும்.

    உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறுவர்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வாருங்கள். தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் மிக மிக குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதனால் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் உடனே கண்டிப்பாக போட்டுக்கொள்ளுங்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் உங்களுடைய முதல்-அமைச்சரான எனக்கு மிகவும் முக்கியம். அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும் மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

    மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதுடன் புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×