search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகரிக்கும் கொள்ளையால் பொதுமக்கள் அதிர்ச்சி

    முகமூடி அணிந்திருந்த 5 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். இதனைக் கண்டு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
    திருப்பூர்:

    பெருமாநல்லூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியிடம் கத்திமுனையில் ரூ.85 ஆயி ரத்தை பறித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

    இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). இவரது மனைவி துளசிமணி (69). இருவரும் தங்களுக்கு சொந்தமான 9 ஏக்கர் தென்னந்தோப்பில் உள்ள தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்திருந்த 5 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். இதனைக் கண்டு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். 

    பின்னர் அந்த கொள்ளையர்கள் ராமசாமி கழுத்தில் கத்தியை வைத்து, துளசிமணியிடம் பணம், நகையை கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டின் அறைக்குள் சென்ற கொள்ளையர்கள் அலமாரியில் வைத்திருந்த ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். 

    இது குறித்து ராமசாமி பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி கொள்ளையர்கள் வயதான தம்பதியை கத்திமுனையில் மிரட்டி ரூ.85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவிநாசி சூளை பேருந்து நிறுத்தம் எம்.கே.பி. பங்களா தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் மைக்கேல்கூலாஸ். இவரது மனைவி மதலைமேரி (46). இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் வாசல் தெளித்துக் கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த நபர் மதலைமேரியை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எனவே கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×