search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    சென்னையில் 8 மாவட்டங்களில் தேர்தல்- அ.தி.மு.க. வட்ட செயலாளர் பதவிக்கு நாளை வேட்புமனு வினியோகம்

    சென்னையை பொறுத்த வரையில் 3,600 பதவிகளுக்கு இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வட்ட செயலாளர் பதவி முதன்மையாக இருப்பதால் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. வட்டம், கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாவட்டம் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

    சென்னையில் உள்ள 8 மாவட்டங்களுக்கும் வட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் நாளை வினியோகிக்கப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் வேட்புமனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

    சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டுக்கு 2 வட்டம் வீதம் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் உள்ளனர். ஒருசில பெரிய வார்டுகள் 3 வட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.

    வட்ட தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணை செயலாளர்கள் (2 பேர்), பொருளாளர், பிரதிநிதிகள் (3 பேர்) ஆகிய 9 பதவிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது.

    சென்னையை பொறுத்த வரையில் 3,600 பதவிகளுக்கு இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வட்ட செயலாளர் பதவி முதன்மையாக இருப்பதால் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

    இத்தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்கள். இதில் ஒருசில இடங்களில் மோதலும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் போட்டி அதிகமாக உள்ள வார்டுகளில் உள்ள தொண்டர்களை அழைத்து பேசி போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெறுவதால் இப்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.

    மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடை பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் பலர் அந்தந்த வட்டங்களில் போட்டியிட தயாராக உள்ளனர். போட்டியை தவிர்க்க அவர்களுக்கு வேறு பதவிகளை கொடுப்பதாகவும் சமரசம் செய்யும் நிலையும் உருவாகி உள்ளது.

    தமிழகத்திலேயே சென்னை பெரு மாநகராட்சியாக இருப்பதால் இங்கு பதவிகளும், போட்டியாளர்களும் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்... நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்... மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்

    Next Story
    ×