search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    நெல்லை அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளை

    நெல்லை அருகே நள்ளிரவில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த கீழமுன்னீர்பள்ளம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 58). இவருக்கு மனைவி மற்றும் 1 மகன், மகள் உள்ளனர்.

    இவரது மகன் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

    இதனால் முன்னீர் பள்ளத்தில் உள்ள வீட்டில் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி மட்டும் வசித்து வருகின்றனர். முத்து ராமலிங்கம் போலீஸ் நிலையம் எதிரே ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கணவன்-மனைவி 2 பேரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கதவுகளை பூட்டிவிட்டு தூங்க சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர்கள் பின்பக்கம் வழியாக சென்றனர். அங்கு திறந்து கிடந்த ஜன்னலின் கம்பியை வளைத்து மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோவின் சாவியை எடுத்து மரத்தினால் ஆன பீரோவை திறந்துள்ளனர்.

    பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 15 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் ரொக்கப்பணம் ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

    இன்று அதிகாலை முத்துராமலிங்கம் எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×