search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு- ஐகோர்ட் உத்தரவு

    வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
    சென்னை:

    ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், “தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பாக பல புகார்கள் உள்ளன. தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

    இதேபோல புகார் கொடுத்த விஜய் நல்லத்தம்பியும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அஜ்மல் கான், மனுதாரரின் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க அவர் தயாராக இருக்கிறார்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக சில கடுமையான விமர்சனங்களை மனுதாரர் செய்துள்ளார். அதனால் அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

    போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, “வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த மோசடி பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

    விஜய்நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது” என்று வாதிட்டார்.

    மேலும், “இந்த விசாரணையின்போது தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், தனக்கு பதில் நியமிக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் ராஜேந்திர பாலாஜி. இதற்காக மதுரையில் கூலிப்படையை தங்க வைத்துள்ளார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். அதனால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றும் அசன் முகமது ஜின்னா வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முன் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த அக்டோபர் 30ந்தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி வழங்கினார். அதில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார்.


    Next Story
    ×