
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 2 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டது.
அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேலே இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. தொடர்ந்து 105 அடியை எட்டும் நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 27 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 671 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் 500 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும் என மொத்தம் 2900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.