search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கலாம்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவு

    பள்ளிகள் மீண்டும் சுழற்சி முறையில் இயங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார். உடன் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வுக்குப் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். அதன் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக்கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு 2 மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சனைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் முன்திருத்த தேர்வுகள் நடத்தப்பட்டு கட்டாயமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது.

    தற்போதுவரை ஒமைக்ரான் வைரஸின் வீரியம் குறைவாக இருப்பதால் ஜனவரி 3-ம் தேதி முதல் 6-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்பு இல்லாமல் தினசரி வகுப்புகள் நடைபெறும் என நடந்து முடிந்த ஊரடங்கு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டபோது வருகிற 25-ந்தேதி மீண்டும் ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும்.

    உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூடுதலாக அந்த பொறுப்பும் வழங்கினால் சிறப்பாக செயல்படுவார். அமைச்சர் பதவி வழங்கினாலும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×