search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    தமிழகத்தில் நுழைந்ததா ஒமைக்ரான்? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு அறிகுறி

    நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொடக்க நிலை அறிகுறி இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், கிண்டி கிங் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உருமாறிய கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 41 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்தில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து அதாவது அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகள் மற்றும் குறைந்த ஆபத்து நிறைந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் முழுவதுமாக கொரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்) மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று பாதிக்கப்படாதவர்கள் ஒரு வார காலம் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதேப்போல் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், தொற்று பாதிப்பு ஏற்படாதவர்கள் அவர்களின் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வார காலத்தில் அதிக ஆபத்து ஏற்படும் நாடுகளில் இருந்து வந்த 11 ஆயிரத்து 481 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    குறைந்த ஆபத்து ஏற்படும் நாடுகளில் இருந்து 58 ஆயிரத்து 745 பயணிகள் வந்ததில் உத்தேசமாக 2 சதவீதம் அடைப்படையில் 1,699 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேருக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என பெங்களூருவில் உள்ள ‘இன்ஸ்டெர்ம்’ நிறுவனத்திடம் இருந்து பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளது.

    மீதமுள்ள 33 பேரும் சென்னை கிங் ஆஸ்பத்திரி, திருச்சி, நாகர்கோவில், சென்னையில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் அவருக்கு ‘எஸ் ஜீன் டிராப்’ இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இது ஓமைக்ரான் தொற்று பாதிப்பின் தொடக்க நிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ‘ஏ’வகை தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதித்த 33 பேரின் சளி மாதிரிகள் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்ற ‘இன்ஸ்டெர்ம்’ நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 7 பேரின் பரிசோதனை முடிவுகளை விரைந்து அனுப்பி வைக்க அந்த நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ பரிசோதனை முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் 13 எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளிலும் சாலை மார்க்கமாக வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×