search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 5,249 பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் தகவல்

    ஒட்டுமொத்தமாக கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட படுக்கைகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 13ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு துவக்கம் செய்யப்பட்டுள்ளது.

    15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கொரொனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமைக்ரான் 38 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து 28 விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. மற்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களை சேர்த்து மொத்தம் 170 வெளிநாடு விமான போக்குவரத்து நாள்தோறும் உள்ளது. ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரில் இதுவரை 5249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 7 பயணிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வருகிறோம். அதில் 6 பேருக்கு ஏற்கனவே டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், 4 பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டு கண்காணிப்பில் தனிமைபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.

    கொரோனா பரிசோதனை

    ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் 80.44% முதல் தவணையும், 47.46% 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல் சனிக்கிழமை 14வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும்

    ஒட்டுமொத்தமாக கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட படுக்கைகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 13ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தொடர்பாக அங்கு ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம். அந்த 3 மாவட்டங்களில் சேர்ந்த நிர்வாகிகளை இணைத்து அங்கு ஒரு பொறுப்பாளர்களை நியமித்து அங்குள்ள பொதுமக்களை தடுப்பூசி போட வைப்பதற்கு ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை

    Next Story
    ×