search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தேர்வு தொடங்கியது

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த வாரம் முழுவதும் இத்தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் 18 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாதாந்திர யூனிட் தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு நடத்தி மதிப்பெண்களை பதிவு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த மாதம் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்திற்கான தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது.

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த வாரம் முழுவதும் இத்தேர்வு நடத்தி முடிக்கப்படும். அடுத்த வாரம் 9, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும்.

    அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அரையாண்டு தேர்வு நடைபெறாததால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் இதுபோன்ற தேர்வுகளை நடத்தி வருகிறார்கள்.

    பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதனை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. நவம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டதால் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் படிப்பு தடைபட்டது.

    மழை பாதிப்பால் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பாடங்களை முடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தனியார் பள்ளிகளிலும் மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்யப்படுகின்றன. 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    Next Story
    ×