
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்னமுதலி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 66). சோளிங்கரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா (57). இவர்களுக்கு விஷ்ணு (29), பரத் (28) என்ற 2 மகன்கள். இதில் மூத்த மகன் விஷ்ணு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இளைய மகன் பரத் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் வீட்டில் இருந்தப்படியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் ராமலிங்கத்தின் தம்பி சிவகுமார், தனது அண்ணனை பார்க்க நேற்று மாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் படுக்கையறையில் ராமலிங்கம், அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ராமலிங்கம் மற்றும் பரத் ஆகிய இருவரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.