search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும்- ராமதாஸ் அறிவுரை

    வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு என்று ராமதாஸ் கூறினார்.
    சென்னை:

    பா.ம.க.வின் புதிய மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இதுவரை இருந்த மாவட்ட செயலாளர் பதவி வேறு, இப்போது வழங்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் பதவி வேறு. இப்போது உள்ள மாவட்ட செயலாளர் பதவி தனித்து செயல்படும் அதிகாரம் கொண்டது.

    எப்போது ஒரு பதவிக்கு அதிகாரம் கூடுகிறதோ, அப்போதே அந்த பதவிக்கு பொறுப்பும் கூடுகிறது. அந்த வகையில் இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பதவி அல்ல... பொறுப்பு. ஆதலால், நீங்கள் அனைவரும் உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்; அவ்வாறே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    புதிய மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய முதன்மைப் பணி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 அல்லது 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைச் சந்திப்பது தான்.

    தமிழ்நாட்டில் எனது கால்படாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு அவற்றுக்காக நாம் போராடாமல் அவர்களின் ஆதரவை பெற முடியாது.

    அதை உணர்ந்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டபோது இல்லாத மகிழுந்துகளும், ஸ்மார்ட் தொலைபேசிகளும் இப்போது சாதாரணமாகி விட்டன. அவை நமது பணிகளை எளிமைப்படுத்த உதவ வேண்டுமே தவிர, மக்களிடமிருந்து விலகியிருக்க வகை செய்யக் கூடாது. மகிழுந்தின் கண்ணாடியைக் கூட இறக்காமல் மக்களையும், கிராமங்களையும் கடந்து செல்வது, தொலைபேசியில் படம் பிடித்து போட்டுவிட்டால் போதும்... நாம் பணி செய்ததாக அனைவரும் நம்பி விடுவார்கள் என்ற எண்ணங்கள் கூடாது.

    ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் அவர்களின் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொண்டர்களின் பெயரும், முகமும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காகத் தான் கிராமங்களை நோக்கி பயணம் மேற்கொள்ளச் சொல்கிறேன்.

    இப்பயணத்தின்போது ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வந்ததன் அடையாளமாக ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 பேரிடம் மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து பெற வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும்.

    அதேபோல், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். தனியாக எதையும் சாதிக்க முடியாது. நிர்வாகிகளிடம் எந்தவிதமான விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. நமது மாவட்டத் தலைமை நம்மைத் தேடி வருகிறது; நமது குரலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கிறது என்பதை விட அடிமட்டத் தொண்டனுக்கு உற்சாகம் அளிக்கும் வி‌ஷயம் எதுவும் இல்லை.

    அதனால் மாவட்ட செயலர்களும், நிர்வாகிகளும் கிராமங்களுக்கு செல்வதையும், மக்களைச் சந்திப்பதையும் முதல் கடமையாக்க வேண்டும். கிராமவாரியான மக்கள் சந்திப்பை இரு வாரங்களில் மாவட்ட செயலாளர்கள் முடிக்க வேண்டும்.

    ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேருவதற்கு பிற கட்சி நிர்வாகிகளும், இதுவரை எந்தக் கட்சியிலும் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்களும் தயாராக உள்ளனர்.

    அவர்களுடன் பேசி அவர்களையும் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைக்க மாவட்ட செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. வலிமை பெறுவதற்கு இவை உதவும்.

    வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு ஆகும். இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எனவே, அனைத்து மாவட்ட செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்; உங்களை விடக் கடுமையாக நானும் உழைப்பேன்.

    அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×