search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    டி.என்.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

    தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் தாக்கல் செய்து, அதற்கான சரிபார்ப்பும் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்து விட்டது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020 மார்ச் 16-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, சுமார் 9 மாத காலத்திற்கு பிறகு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது.

    சட்டம் தாமதமாக நடைமுறைக்கு வந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கானத் தேர்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து டி.என்.பி.எஸ்.சி தொடர்ந்த மேல்முறையீடும் கடந்த ஜூலை மாதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

    ஆனால், அதற்கு முன்பாகவே முதல் தொகுதி பணிக்கான தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி விட்டன. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அது செல்லாததாகி விட்டதால், புதிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டு சட்டப்படி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி புதிய முடிவை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.

    டிஎன்பிஎஸ்சி


    தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் தாக்கல் செய்து, அதற்கான சரிபார்ப்பும் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைந்து விட்டது. ஆனால், அதன்பின் 2 மாதங்கள் நிறைவடைந்தும் புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படியான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அது முதல் தொகுதி பணிக்காக காத்திருக்கும் தேர்வர்களிடம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக முதல் தொகுதி பணிகளுக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முடியவில்லை.

    எனவே, இனியும் தாமதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்திற்குள் வெளியிட்டு, முதன்மைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் தொகுதி 2, தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் அறிவித்து, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×