search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருவான்மியூர் சிக்னல் அருகே ரவுடி கொலை- 2 வாலிபர்கள் சுற்றி வளைத்து தாக்குதல்

    ரவுடி கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிகவும் இளம்வயதை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த வயதுடைய இளைஞர்கள் யாரும் திருவான்மியூர் பகுதியில் தலைமறைவாகி இருக்கிறார்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சிக்னல் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    திருவான்மியூர் சிக்னலில் இருந்து டைடல் பார்க் செல்வதற்காக வலது புறம் திரும்பும் சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது அங்கு வந்த 2 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதனால் நிலைகுலைந்த அவர் அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது 2 இளைஞர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெரிய பட்டாகத்தியை எடுத்து சரமாரியாக அவரை வெட்டினர்.

    இதில் இருந்து தப்புவதற்காக அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 2 இளைஞர்களும் அவரை அங்கேயே வெட்டி சாய்த்தனர்.

    பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த கொலை வெறித்தாக்குதல் அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலர் அதனை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.

    பெண்கள் பலர் அலறி கூச்சல் போட்டார்கள். வாலிபரை வெட்டிய 2 இளைஞர்களுக்கும் 19 வயதே இருக்கும். இருவரும் வாலிபரை வெட்டி சாய்த்துவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    சரமாரியாக வெட்டுப்பட்ட வாலிபர் சாலை ஓரமாக இருந்த நடைபாதையிலே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அடையாறு துணை கமி‌ஷனர் மகேந்திரன் அறிவுறுத்தலின்பேரில் தரமணி உதவி கமி‌ஷனர் ஜீவானந்தம், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் ஆகியோர் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் என்பதும், அவர் ரவுடி என்பதும் தெரிய வந்தது.

    ரவுடி விக்கி மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு உள்ளது. கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது. இந்த நிலையில்தான் விக்கியை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்துள்ளனர்.

    விக்கியால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விக்கிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது இன்னும் உறுதியாக தெரியாத நிலையில் அதனை கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகளை அடையாளம் காண தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

    கொலை தொடர்பாக திருவான்மியூர் சிக்னல் பகுதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விக்கியின் நண்பர்கள் யார்- யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களிடமும் கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். குடும்ப பிரச்சினையை தாண்டி தனிப்பட்ட முறையில் விக்கிக்கு யாருடனாவது பகை இருந்ததா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலையாளிகள் இருவருக்கும் 19 வயதே இருக்கும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த இதே வயதுடைய இளைஞர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிகவும் இளம் வயதை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் அந்த வயதுடைய இளைஞர்கள் யாரும் திருவான்மியூர் பகுதியில் தலைமறைவாகி இருக்கிறார்களா என்பது பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் பழைய குற்றவாளிகள் யாருக்கேனும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த கொலை சம்பவம் திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு விக்கியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், கொலை நடைபெற்ற பகுதியிலும் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

    Next Story
    ×