search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பணி முடிந்து சென்ற பெண் போலீசை தாக்கி நகை பறித்த கொள்ளையர்கள்

    பரமத்திவேலூரில் பெண் போலீசாரிடமே கொள்ளையர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி மணிமேகலை (வயது 42). போலீஸ் ஏட்டான இவர் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு பணியை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் மணிமேகலையை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அவரது கழுத்தில் இருந்த 6½ பவுன் செயினை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த செயினை பிடித்துக் கொண்டு கொள்ளையர்களிடம் போராடினார்.

    இதனால் கழுத்தில் இருந்த பாதி நகையான 3 சவரன் நகையை மட்டும் மர்மநபர்கள் பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மணிமேகலையை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரது கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் ஏட்டின் செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் போலீசாரிடமே கொள்ளையர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×