search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னருடன் முக ஸ்டாலின் சந்திப்பு
    X
    கவர்னருடன் முக ஸ்டாலின் சந்திப்பு

    நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா விவகாரம்- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து, “நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானதா, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்-அமைச்சர் அமைத்தார்.

    நீட் தேர்வு

    இக்குழுவானது  நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.

    இந்தக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

    மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×