search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதை படத்தில் காணலாம்.
    X
    திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதை படத்தில் காணலாம்.

    திருவாரூர்- தஞ்சை நெடுஞ்சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி

    திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 36 குடியிருப்புகள், 3 ஆயிரத்து 965 வணிக நிறுவனங்கள் உள்ளன. வீடுகள், கடைகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக சேகரிக்கப்படும் 12 டன் குப்பைகள் திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

    இந்த நிலையில் திருவாரூர் நகரின் எல்லை பகுதியான கல்பாலம் பகுதியில் உள்ள திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி ஊழியர்கள் கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    இதில் அதிகமாக உணவு பொருட்கள் கழிவுகளாக கொட்டப்படுகிறது. தற்போது மழை நீர் கழிவுகள் இடையே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை துணியால் மூடிச்செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது. பிரதான சாலையாக உள்ள இதன் வழியாக கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் இவ்வாறு கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    தேங்கி கிடக்கும் உணவு கழிவுகளிடையே மாடு, பன்றிகள் இரை தேடுகின்றன. அவை சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அந்த பகுதியில் ஊராட்சி குப்பை கிடங்கு மக்கள் நலன் கருதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் நகர் பகுதி குப்பை கழிவுகள் கொட்டப்படுவது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×