search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதையும் படத்தில் காணலாம்.
    X
    தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதையும் படத்தில் காணலாம்.

    4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு - உடுமலை அமராவதி கரையோர பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

    அமராவதி அணைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 88அடியை எட்டியது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 90 அடி உயரம் கொண்ட அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. 

    பாம்பாறு, கூட்டாறு, தேனாறு வழியாக தூவானம் அருவியை கடந்து அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்தநிலையில் அமராவதி அணைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 88 அடியை எட்டியது.  

    இதையடுத்து அணையில் இருந்துஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 

    இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி  தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.  

    கரையோர பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அணையின் நீர்மட்டம், நீர்வரத்து வெளியேற்றம் ஆகியவற்றை அளவிட மானிட்டர் உள்ளது. 

    இந்த நிலையில் அணையின் மேற்பகுதியில் தண்ணீரை தொடாத வகையில் சென்சார் மூலம் இயங்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லியமாக நீர் மேலாண்மையை மேற்கொள்ள முடியும். 

    அதிகாரிகள் அணைக்கு சென்று நீர் மட்ட விவரத்தை அறிய வேண்டியதில்லை. தானியங்கி முறையில் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு நீர்மட்டம் விவரம் கிடைத்துவிடும். சென்னையிலிருந்து இதை அறிந்து கொள்ள முடியும் என நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×