search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடத்தில் விற்பனையாகாமல் தேங்கி உள்ள காடாத்துணிகள்.
    X
    பல்லடத்தில் விற்பனையாகாமல் தேங்கி உள்ள காடாத்துணிகள்.

    நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி பாதிப்பு-பல்லடத்தில் ரூ.600 கோடி விசைத்தறி துணிகள் தேக்கம்

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியான முக்கிய தொழிலாக விசைத்தறி ஜவுளித்தொழில் உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியான முக்கிய தொழிலாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இத்தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு  கொரோனா  பொது முடக்கத்தால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது.

    மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால் சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

    அதனால் தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக அனுப்பப்படும் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மொத்த ஜவுளி வியாபாரிகள், ஏற்கனவே ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் இருந்த காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை நிறுத்தியும் வைத்தனர்.

    மேலும் ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு இதுவரை பணம் அனுப்பாமலும் உள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.  கொரோனா பொதுமுடக்கத்தால் 80 சதவீத தொழில் முடங்கி விட்டது.

    ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உற்பத்தியாளர்கள் மட்டுமே தற்போது  விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர்.எனவே வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதங்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும்.

    அசல் தொகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜவுளித்தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். 

    துணி உற்பத்திக்கான மூலதன பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 20 கவுண்ட் ரகம் (வார்ப்பு) ஒரு கிலோ ரூ.140 - ரூ.150 ஆக இருந்தது.

    தற்போது ரூ.195 - ரூ.205 ஆக உயர்ந்துள்ளது. கழிவு பஞ்சு விலை உயர்ந்து விட்டதால்தான் நூல் விலையை உயர்த்த வேண்டியதாகி விட்டது என்று ஒ.இ.மில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். நூல் விலை உயர காரணம் சீனாவில் மின்சாரப் பற்றாக்குறை, நிலக்கரி பிரச்சினை ஆகியவற்றால் சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் துணி ரகங்கள் வருவதில்லை.

    இதனால் வியட்நாம்,இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற மூலப்பொருள்கள் ஏற்றுமதியாகிறது. அதனால் நமது நாட்டில் எந்த விலை கொடுத்தாலும் உடனே நூல் கிடைப்பதில்லை.

    முன்பணம் கட்டி ஆர்டர் செய்தால்தான் 10 நாட்களுக்கு  பின்னர்நூல் கிடைக்கும் நிலை உள்ளது. இந்தியாவில் இருந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யாமல் மதிப்புக்கூட்டு பொருள்களாக தயாரித்து அனுப்பினால் கூடுதலாக அன்னியசெலவாணி கிடைக்கும்.

    தீபாவளி பண்டிகைக்கு முன்பு 20 கவுன்ட் 63 இஞ்ச் காடா துணி ஒரு மீட்டர் ரூ.50க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அதே துணி ரூ.45க்கு தான் விலை போகிறது. ஒரு மீட்டர் துணி உற்பத்தி அசல் விலை ரூ.53 ஆகிறது.

    அதற்கு மேல் விலை கிடைத்தால் தான் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். பஞ்சு மற்றும் நூல் விலை  ஒரே சீராக இருந்தால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலும் சீராக நடைபெறும். எனவே நூல், பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்காலிக தடையை உடனே பிறப்பிக்க வேண்டும்.

    மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சை உள்நாட்டு தேவைக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். இத்தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×