search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலமேடு அருகே தவறான உறவால் வந்த வினை - மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது

    பாலமேடு அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது30). போர்வெல் ஆபரேட்டராக உள்ளார்.

    இவரது மனைவி கலைவாணி (27) தனியார் ஆலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கலைவாணி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதனால் அடிக்கடி கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தறராறு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீசார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது கலைவாணி சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    கலைவாணியின் சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது கணவரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கலைவாணி வேலைக்கு செல்லும் இடத்தில் வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததால் கண்டித்ததாகவும், ஆனாலும் கேட்காததால் ஆத்திரத்தில் அழகர்சாமி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து அழகர்சாமியை பாலமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×