search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    X
    கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கொளத்தூரில் மழை பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மதுரவாயல், நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் வெள்ள நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் 3 நாட்களாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டாலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை, தென்சென்னை பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

    துறைமுகம், ஆர். கே.நகர், பெரம்பூர் பகுதிகளுக்கு நேற்றும் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    இன்று 3-வது நாளாக கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் பகுதிகளுக்கு
    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

    முதலில் கொளத்தூர் ரமணா நகர் பகுதிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். பாய், போர்வை, பால் பாக்கெட் போன்ற உதவிகளையும் வழங்கினார்.

    அதன் பிறகு சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உணவு வழங்கினார். கோபாலபுரம் ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்ட பிறகு செம்பியம் பகுதிக்கு சென்றார்.

    மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயாரிக்கப்படும் உணவு கூடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    அங்கு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தயாரிக்கப்படும் உணவு கூடத்தை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

    அங்கிருந்து கே.சி.கார்டன் 2-வது தெருவுக்கு சென்று உணவு வழங்கினார்.

    பெரம்பூர் பேப்பர் மில் சாலை, சிவ இளங்கோ சாலை சந்திப்பில் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார். கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி, 24ஏ தெரு, அக்பர் ஸ்கொயர் மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

    டெம்பிள் ஸ்கூல் ரோடு பகுதியில் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார். தாதன்குப்பம் குளம், டி.ஆர்.ஜே. சாலை, வீனஸ் நகர் 1-வது தெரு பகுதிகளில் மழைநீரில் நடந்து சென்று அங்கு நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அங்கிருந்து ரெட்டேரிக்கு சென்றார். தணிகாசலம் கால்வாயை பார்வையிட்டு ரெட்டேரி வடக்கு பக்கம் கொளத்தூர் ஏரியை பார்வையிட்டார். பின்னர் கண்ணகி நகர் சென்று மக்களுக்கு உணவு வழங்கினார்.

    கொரட்டூர் ஏரியையும் பார்வையிட்டு அந்த பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் விருகம்பாக்கம் பகுதிக்கு சென்றார். விருகம்பாக்கம் கெனால், குலசேகரபுரம் வடிகால் பகுதியையும் பார்வையிட்டார். அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    விருகம்பாக்கம் சஞ்சய்காந்தி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மதுரவாயல், நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெறும் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்டார்.

    இறுதியாக போரூர் ஏரியையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.எல்ஏ.க்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, ஜோசப்சாமுவேல், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சென்றனர்.


    Next Story
    ×