search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தென் மாவட்டங்களில் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து மத்திய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.

    தெற்கு வங்கக்கடல் மத்தியில் இருந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையம்

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும்.

    நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும்.

    30, 31-ந் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

    1-ந் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×