search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரியா
    X
    யூரியா

    தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

    புதுச்சேரி துறைமுகத்தில் தற்சமயம் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஒன்றிய அரசிற்கு அக்டோபர் மாதம் 21-ந்தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து ஒன்றிய அரசு 90,000 மெ. டன் யூரியா தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 லட்சம் ஹெக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நடப்பு சம்பா ( இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணை வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டி.ஏ.பி. உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

    ஒன்றிய அரசு, அக்டோபர் மாதத்திற்கு யூரியா, டி.ஏ.பி .மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெ.டன், 4,480 மெ.டன் மற்றும் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ. டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.

    டி.ஏ.பி. 45,150 மெ. டன் உரத்தேவைக்கு 4,480 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை 11,781 மெ.டன் டி.ஏ.பி. வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று பொட்டாஷ் உரத்தின் அக்டோபர் மாத உரத்தேவை 31,700 மெ. டன்னிற்கு பொட்டாஷ் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுநாள்வரை 14,456 மெ. டன் பொட்டாஷ் உரம் வழங்கப்பட்டுள்ளது.

    இச்சூழ்நிலையில் விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும், தமிழ்நாட்டில் உரத்தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு விவசாய பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு முதல்-அமைச்சர் ஒன்றிய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சருக்கு 21.10.2021 அன்று யூரியாவினை உரித்த காலத்தே வழங்கிடவும், 20,000 மெ. டன் டிஏபி மற்றும் 10,000 மெ. டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்து குறைவின்றி வழங்குமாறு கடிதம் எழுதினார்.

    முதல்-அமைச்சரின் கடிதம் காரணமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90,000 மெ.டன் இறக்குமதி யூரியாவினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இதுநாள் வரை 25,212 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. எம்.எப்.எல். உர நிறுவனம் இது நாள் வரை 26,185 மெ. டன் யூரியாவினை வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10,000 மெ. டன் மற்றும் எம்எப்எல் உர நிறுவனம் 8,000 மெ. டன் யூரியாவினை வழங்கிட திட்டமிட்டுள்ளன.

    காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4,000 மெ.டன் உரம் யூரியா ரயில் மார்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டி.ஏ.பி. உரத்தினை முழுமையாக தேவைக்கேற்ப வழங்குவதற்கு காக்கிநாடா துறைமுகத்திற்கு 02.11.2021 அன்று வரவுள்ள இப்கோ டிஏபி உரம் 45,000 மெ.டன்னிலிருந்து அதிகளவில் தமிழ்நாட்டிற்கு டி.ஏ.பி. ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக இதர காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண்துறை ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இதன்படி, இதுநாள் வரை காம்ப்ளக்ஸ் உரம் 60,634 மெ. டன் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இப்கோ, கொரமண்டல், கிரீன்ஸ்டார், ஐபிஎல், மங்களூர் பெர்டிலைசர், ஸ்மார்ட்கெம் மற்றும் பாக்ட் உள்ளிட்ட முன்னணி உர நிறுவனங்களால் 45,000 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் வழங்கிட நடவடிக்கைகள் வேளாண்மைத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ள 27,000 மெ. டன் பொட்டாஷ் உரத்திலிருந்து அதிகளவில் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் வேளாண்மைத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாநிலத்தில் தனியார் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் தற்போது யூரியா 64,111 மெ., டன், டிஏபி 23,654 மெ. டன், பொட்டாஷ் 35,590 மெ. டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,17,575 மெ. டன் உரங்கள் இருப்பில் உள்ளன.

    அனுதினமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு மற்றும் நகர்வு பணிகள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும் மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனரால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரத்தேவை தொடர்பான விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகள் வேளாண்மைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×