search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    சூலூரில் வாலிபர்களை ஓட, ஓட விரட்டி தாக்கிய 9 பேர் கும்பல்

    சூலூரில் வாலிபர்களை ஓட, ஓட விரட்டி தாக்கிய 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் சூலூரில் உள்ள வாலிபர்கள் சிலர் வடக்கு, தெற்கு என பிரிந்து கால்பந்து அணிகளை உருவாக்கி விளையாடி வருகிறார்கள். இந்த இரு அணியினருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக மோதல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த மாதம் தெற்கு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை தாக்கிய புகாரின் பேரில் வடக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ் உள்பட 4 பேரை சூலூர் போலீசார் தேடி வந்தனர். தங்கள் மீது புகார் கொடுத்ததால் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ் மீது ஆத்திரத்தில் இருந்தனர். அவரை மீண்டும் தாக்குவதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சந்தோஷ் தனது நண்பர் தினேஷ் என்பவருடன் சூலூர் பஸ் நிலையம் அருகில் நின்றிருந்தார். இதுகுறித்து தகவலை யாரோ ரமேசுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் தனது நண்பர்கள் 9 பேருடன் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு அவர்கள் சந்தோசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் கொண்டு வந்த உருட்டு கட்டை, கீழே கிடந்த கல், பாட்டில்களை எடுத்து சந்தோஷை தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது நண்பர் அதனை தடுக்க முயன்றபோது, அவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

    இதனால் வலி தாங்க முடியாமல் 2 பேரும் அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சூலூர் பஸ்நிலைய சாலையில் அவர்கள் அங்கும், மிங்கும் ஓடினர். ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி வந்து தாக்கினர்.

    இதை அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும், கடைக்காரர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கையில் கட்டையுடனும், பாட்டிலுடனும் நின்றதால் அவர்கள் அருகே செல்லவில்லை. ஒரு கட்டத்தில் சந்தோசும், அவரது நண்பரும் தப்பித்தால் போதும் என அந்த பகுதியில் இருந்த ஜவுளி கடைக்குள் புகுந்து விட்டனர்.

    அந்த கும்பலை சேர்ந்தவர்களும் கடைக்குள் கட்டையுடன் புகுந்து அங்கும் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாருக்கு தகவல் கொடுப்பதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. வாலிபர்களை 10 பேர் கும்பல் ஓட, ஓட விரட்டி தாக்கும் காட்சிகள் பஸ் நிலைய பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதையடுத்து சூலுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த ரமேஷ் உள்பட 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×