search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை: 4 பேருக்கு வலைவீச்சு

    கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜாரில் சாலையோரம் வளையல் கடை நடத்தி வருபவர் மகேஸ்வரி (வயது 47). இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சென்னை சென்டிரலில் இருந்து சூளூர்பேட்டை நோக்கிச்சென்ற மின்சார ரெயிலில் சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டபோது மர்மநபர்கள் 4 பேர் மகேஸ்வரி அமர்ந்திருந்த ரெயில் பெட்டியில் ஏறினார்கள்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் அரை கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று கொண்டிருந்தபோது மகேஸ்வரியிடம் கத்திமுனையில் கொலை மிரட்டல் விடுத்த அவர்கள், மகேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் அவரிடம் இருந்த மணிபர்சுடன் கூடிய ரூ.4,800 போன்றவற்றை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடமான கும்மிடிப்பூண்டிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ஓடும் ரெயிலில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை மற்றும் ரொக்கப்பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து புறநகர் ரெயிலில் கத்திமுனையில் பெண்ணிடம் நகை மற்றும் ரொக்கப்பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×