search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை- வைகோ

    மாவட்ட செயலாளர்கள் துரை வைகோவுக்கு உரிய பதவியை அளிக்க வேண்டும் என்று கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைகோ கூறியுள்ளார்.
    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது மகன் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே தேர்வு செய்யப்பட்டார்.

    2 பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு என்று கேட்டார்கள்? தேர்தல் நடப்பதை போல வாக்குப்பெட்டி வாங்கி ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 106 பேரில் 104 பேர் துரை வையாபுரி ம.தி.மு.க.வுக்கு வரவேண்டுமென்று வாக்களித்திருந்தனர். பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்திருக்கலாம். ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தி அவரை தேர்ந்து எடுத்துள்ளோம். இது எந்தக் கட்சியிலும் இல்லாதது. இது ம.தி.மு.க.வில் தான் நடந்துள்ளது.

    தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை வரவேற்று மாவட்ட செயலாளர்கள் அவருக்கு உரிய பதவியை அளிக்க வேண்டும் என்று கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக்கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும். நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரிக்கு தகுதி வந்துவிட்டது. மேடையிலும் நன்றாக பேசுகிறார், பேட்டியிலும் நன்றாக பேசுகிறார். அவருடைய பேட்டியைப் பார்த்து விட்டு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார் என்று சொன்னார்.

    துரை வையாபுரி

    துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளார்கள். அது கட்சிக்கு நல்லதாக முடியும். ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி வலுவாக உள்ளது.

    ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், என்னால் தொடர்ந்து போக முடியாததால் விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, வேறு எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்ததால் அவர்களது வீடுகளில் சோதனை நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×