search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடை வாடகை செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை

    கோவையில் கடை வாடகை செலுத்த முடியாததால் மனவேதனை அடைந்த டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை ஆலந்துறை மாரிசெட்டி வீதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 54).

    இவர் போளுவாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வந்தும் அவருக்கு வேலை குறைவாக இருந்ததாக தெரிகிறது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்தார். மேலும் ஒரு மாத கடை வாடகை கொடுக்கவில்லை.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று திவாகர் வழக்கம்போல கடைக்கு சென்றார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மதியம் கடையைப் பூட்டிக் கொண்டு உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடை வெகுநேரமாக பூட்டி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று கடை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. பின்னர் இதுகுறித்து ஆலந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×