search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கொலை வழக்கில் சாட்சியாக இருந்ததால் கணவன்- மனைவி அடித்துக்கொலை

    விழுப்புரம் அருகே கொலை வழக்கில் சாட்சியாக இருந்ததால் கணவன், மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் பெரியபாபுசமுத்திரம் கிராமம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 77). விவசாயி. இவரது மனைவி பொற்கலை (72) இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் மர்ம மனிதர் ஒருவர் ரங்கநாதனின் வீட்டிற்குள் நைசாக புகுந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த ரங்கநாதனை தலையனையால் அமுக்கி கொலை செய்தார்.

    பின்னர் அந்த மர்ம மனிதர் பொற்கலையையும் தலையனையால் அமுக்கி கொல்ல முயன்ற போது பொற்கலை அந்த மர்ம மனிதரிடம் இருந்து தப்பித்து காப்பாறுங்கள்...காப்பாற்றுங்கள்... என்று அலறினார்.

    உடனே அந்த மர்ம மனிதர் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து பொற்கலையை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த பொற்கலை ரத்த வெள்ளதில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம மனிதர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காலை நீண்ட நேரமாகியும் ரங்கநாதனும், அவரது மனைவி பொற்கலையும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு கணவன்- மனைவி 2 பேரும் படுக்கையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த ரங்கநாதன்,பொற்கலை ஆகிய 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரங்கநாதன், பொற்கலை ஆகிய 2 பேரையும் பெரியபாபு சமுத்திரத்தை சேர்ந்த அருள்ராஜ்(38) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அருள்ராஜை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மேல்மலையனூர் பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அருள்ராஜை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    அவை வருமாறு:-

    கடந்த ஆண்டு கண்டமங்கலம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவரை அருள்ராஜ் அடித்து கொலை செய்தார். பின்னர் அந்த பெண்ணின் உடலை கட்டி தூக்கி செல்வதற்காக ரங்கநாதன்,பொற்கலை ஆகியோரிடம் சாக்குபை வாங்கி சென்றார்.

    பின்னர் அந்த சாக்குபையில் கொலை செய்த பெண்ணின் உடலை கட்டி வேறு இடத்திற்கு கொண்டு சென்று அருள்ராஜ் வீசினார். இந்த கொலை தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்ராஜை கைது செய்தனர். இந்த கொலை வழக்குக்கு சாட்சியாக ரங்கநாதன், பொற்கலை ஆகிய 2 பேரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அருள் ராஜ்க்கு ஜாமீன் வழங்கபட்டது. ஜாமீனில் வெளியே வந்த அருள் ராஜ் பெண்ணின் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்து சாட்சியாக உள்ள ரங்கநாதன், பொற்கலை ஆகிய 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன் பேரில் ரங்கநாதன்,பொற்கலை ஆகிய 2 பேரையும் வீடு புகுந்து அருள்ராஜ் கொலை செய்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட அருள்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×