search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்
    X
    குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்

    நெம்மேலியில் ரூ.1,259 கோடியில் கட்டப்படும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நெம்மேலியில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னைக்கு அருகே வற்றாத நீர் ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னை பெருநகரம் குடிநீருக்காக வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளது.

    வடகிழக்கு பருவமழை பொய்க்கும் காலங்களில் சென்னையின் நீண்ட கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் ஏற்கனவே அமைத்துள்ளது.

    இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன.

    இதில் மீஞ்சூரில் நிறுவப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையத்தை 2010-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

    2-வதாக நெம்மேலியில் அமைக்கப்பட்ட 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு அன்றைய துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி அன்று அடிக்கல் நாட்டினார். இந்த நெம்மேலி சுத்திகரிப்பு நிலையம் 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    ஆனாலும் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நெம்மேலியில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

    தினமும் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையம் ரூ.1,259.38 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அம்ரூத் திட்டம் மற்றும் ஜெர்மானிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தை நெம்மேலிக்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    இந்த நிலையத்தில் கடல் நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், வடிகட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி மற்றும் உந்துநிலையம், காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், நிர்வாகக் கட்டிடம், கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடிகட்டி போன்ற கட்டுமானப் பணிகளையும் முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    பார்வையிட்டார்.

    இந்த பணிகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை ஏப்ரல் 2023-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    முக ஸ்டாலின்

    மேலும், இத்திட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முட்டுக்காட்டில் இறங்கி பார்வையிட்டார்.

    இத்திட்டம் நிறைவேறும் போது பெறப்படும் குடிநீர் தென்சென்னை பகுதிகளான உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மக்களுக்கு சென்றடையும்.

    முன்னதாக நெம்மேலியில் செயல்பாட்டில் உள்ள 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    நெம்மேலிக்கு இன்று அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயராஜ் குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் ஆகாஷ் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுடன் சென்றிருந்தனர்.


    Next Story
    ×