search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வாலிபர் வெட்டிக்கொலை: கள்ளக்காதலிக்கு தொல்லை கொடுத்ததால் கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்

    அஞ்சு கிராமம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள ராமனாதிச்சன்புதூரை சேர்ந்தவர் ரோச் அஜய் ஜான்சன்(வயது32). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், 1½ வயதில் மகனும் உள்ளனர். ஷாலினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

    ரோச் அஜய் ஜான்சன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பிவந்த அவர், அதன் பிறகு வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இங்கேயே தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ரோச் அஜய் ஜான்சனும், அதே பகுதியை சேர்ந்த லியோன் பிரபாகரன்(29), குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(30) ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ரோச் அஜய் ஜான்சன், குமாரபுரம் தோப்பூர் ஆலமூடு முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பிரபாகரன் 2 பேருடன் வந்தார். அவர் ரோச் அஜய் ஜான்சன் மற்றும் லியோன் பிரபாகரனை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

    பின்பு பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ரோச் அஜய் ஜான்சனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த ரோச் அஜய் ஜான்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத பிரபாகரன் உள்ளிட்டோர், அவரை இரும்பு கம்பியாலும் சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த ரோச் அஜய் ஜான்சனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ரோச் அஜய் ஜான்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் லியோன் பிரபாகரன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.டெம்போ டிரைவரான பிரபாகரனுக்கு, அஞ்சு கிராமம் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதுபற்றி தனது நண்பர்களான ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரன் ஆகியோரிடம் கூறிவந்துள்ளார்.

    இதனால் நண்பனின் கள்ளக்காதலி மீது ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரன் ஆகிய இருவருக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் பிரபாகரனின் கள்ளக்காதலியை சந்தித்து, அவரது செல்போன் எண்ணை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து அந்த பெண், பிரபாகரனிடம் தெரிவித்தார். அதில் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்கள் ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரன் ஆகியோரிடம் கேட்டார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரும் ரோச் அஜய் ஜான்சனை வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிரபாகரன், கண்ணன், அமுல் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்தனர். தலைமறைவாகிய அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரோச் அஜய் ஜான்சன் மற்றும் லியோன் பிரபாகரன் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தோம். எனக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. எங்களுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி நண்பர்கள் 2 பேரிடமும் தெரிவித்திருந்தேன். இதையடுத்து அவர்கள் 2 பேரும் எனது கள்ளக்காதலியை தொந்தரவு செய்தனர்.

    அவரை எனக்கு தெரியாமல் சந்தித்து அவருடைய செல்போன் எண்ணை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர். அதுபற்றி எனது கள்ளக்காதலி என்னிடம் தெரிவித்தார். இதுகுறித்து கேட்டபோது நண்பர்களான எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    எனது கள்ளக்காதலிக்கு தொல்லை கொடுத்தபடியே இருந்ததால் சம்பவத்தன்று லெனின் பிரபாகரனுடன் வந்த ரோச் அஜய் ஜான்சனை, கண்ணன், அமுல் ஆகியோர் உதவியுடன் வெட்டிக் கொன்றேன்.

    இவ்வாறு கைதான பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    ரோச் அஜய் ஜான்சன் கொலை வழக்கில் கண்ணன் மற்றும் அமுல் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
    Next Story
    ×