search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் சீற்றம் காரணமாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள்.
    X
    கடல் சீற்றம் காரணமாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள்.

    குமரியில் கடல் சீற்றம்- விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் குளச்சல் மற்றும் சின்னமுட்டம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.
    கன்னியாகுமரி:

    அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரியில் ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. சின்னமுட்டம், கோவளம், ராஜாக்கமங்கலம், குளச்சல், வாணியக்குடி, குறும்பனை, நீரோடி துறை, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, தூத்தூர் பகுதிகளிலும் கடல் சீற்றமாக இருந்தது.

    இதன் காரணமாக கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, வாவத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கட்டுமரங்கள், வள்ளங்கள் என வரிசையாக படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் குளச்சல் மற்றும் சின்னமுட்டம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பதால் மீன்வரத்து அடியோடு நின்று போனது. மீன்சந்தைகளும் மீன் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகங்களும், கடற்கரைக் கிராமங்களும் வெறிச்சோடியது.


    Next Story
    ×