search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குளம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை- 5 பேர் கைது

    ஆலங்குளம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூரை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு 2 மனைவிகள். அதில் மூத்த மனைவியின் மகன் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி. 2-வது மனைவியின் மகன் இசக்கிமுத்து (29). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. மாரியப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாஸ்கர். உறவினர்களான இவர்களுக்கு இடையே வழிப்பாதை தொடர்பாக முன்பகை இருந்தது.

    இதனால் மாரியப்பன் மது குடித்து விட்டு வந்து அடிக்கடி இசக்கிமுத்து, பாஸ்கர் ஆகியோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த மாரியப்பனுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது பாஸ்கர், அவரது தம்பி பாலாஜி (25), தங்கை தங்கசுந்தரி (33), அவரது கணவர் சுடலைக்கண்ணன் (39) ஆகியோரும் அங்கு வந்து மாரியப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றவே இசக்கிமுத்து அருகில் கிடந்த கட்டையை எடுத்து மாரியப்பனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை வீட்டிலேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பயங்கர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இசக்கிமுத்து, பாஸ்கர், பாலாஜி, தங்கசுந்தரி, சுடலைக்கண்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    சொத்து தகராறில் தொழிலாளியை அவரது தம்பியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு, சாந்தி (38) என்ற மனைவியும், மாரி (18), பேச்சி (16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
    Next Story
    ×