search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டும் எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்
    X
    ஓட்டும் எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்

    குன்றத்தூர் வாக்குகள் எண்ணும் பணி 3 மணிநேரம் தாமதமாக தொடக்கம்

    பரங்கிமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஓட்டுகள் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் எண்ணப்பட்டன. அங்கும் சுமார் அரைமணிநேரம் தாமதமாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஓட்டுகள் மாங்காடு முத்துக்குமரன் கல்லூரியில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணும் பணிக்காக இன்று காலையிலேயே ஊழியர்கள் வந்தனர்.

    அப்போது அவர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறி ஓட்டுப்பெட்டியை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

    காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்கு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்தபடி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘காலை 6 மணிக்கெல்லாம் ஓட்டு எண்ணும் இடத்துக்கு வந்து விட்டோம். நாங்கள் கொண்டுவந்த உணவை உள்ளே அனுமதிக்கவில்லை. காலை நேர உணவையும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தரவில்லை’ என்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களுடன் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் பேச்சு நடத்தி அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். இதையடுத்து காலை 11 மணி அளவில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக குன்றத்தூர் ஒன்றிய வாக்குகள் எண்ணும் பணி 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    பரங்கிமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஓட்டுகள் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் எண்ணப்பட்டன. அங்கும் சுமார் அரைமணிநேரம் தாமதமாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஓட்டுகள் சிங்கப்பெருமாள் கோவில், மேல் ரோசபுரம், சி.எஸ்.ஐ. இவாட் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் எண்ணப்பட்டன. இங்கும் ஓட்டு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஓட்டுகள் பென்னலூரில் உள்ள வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. இங்கும் ஓட்டு எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 10.30 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

    Next Story
    ×