search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    சிலருக்கு நம்மை திட்டுவதால் தான் பிழைப்பு ஓடுகிறது - காங்கிரசை சாடிய சீமான்

    தமிழகத்தில் திராவிட கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் சீமான் குற்றம் சாட்டினார்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறியும், எனவே அதை தடுக்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தக்கலையில் உள்ள கல்குளம் தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் 2008, 2009 ஆகிய கால கட்டங்களில் காங்கிரசை எதிர்த்துப் போராடினேன். ஆனால் இப்போது காங்கிரஸ் என்னை எதிர்த்துப் போராடுகிறது. சிலருக்கு நம்மை திட்டுவதால் தான் பிழைப்பு ஓடுகிறது.

    கே.எஸ்.அழகிரி

    தமிழகத்தில் 32 ஆறுகளில் மணலை அள்ளிவிட்டார்கள். 30 முதல் 40 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. ஏரி, குளம் ஆகியவற்றை நாம் உருவாக்கினோம். அருவி, ஆறு ஆகியவை தானாக உருவாகியது. ஆற்றில் அரை அங்குலம் மணல் சேர்வதற்கு நூறு ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த மணலை சுலபமாக அள்ளிச் சென்று விட்டார்கள்.

    ஆயிரம் அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தாலும் அதை குடித்து பனை மரங்கள் நன்கு வளரும். ஆனால் இப்போது பனை மரங்கள் அழிந்து வருகின்றன. அப்படி எனில் நிலத்தடி தண்ணீர் ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழ் சென்றுவிட்டது என்று தானே அர்த்தம்.

    இந்தியாவில் 33 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என ஆய்வு சொல்கிறது. ஆனால் தற்போது 13 விழுக்காடு தான் காடுகள் உள்ளன. ஒரு கார் வெளியிடும் நச்சுப் புகையை சரிசெய்ய வேண்டுமென்றால் 6 மரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இங்கு எத்தனை மரங்கள் இருக்கின்றன? இதையெல்லாம் கண்டித்து பா.ஜ.க, காங்கிரஸ், திராவிட கட்சிகள் பேச முடியுமா?

    கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக இங்கிருந்து மலையை உடைத்து பாறைகளைக் கொண்டு செல்கிறார்கள். அதே சமயம் கேரளாவிலும் மலைகள் உள்ளன. அதை உடைத்து ஏன் துறைமுகம் கட்டக்கூடாது. துறைமுகங்கள் எதற்காக கட்டுகிறார்கள்? 21 ஆயிரம் கோடி ஹெராயின் வந்ததற்கு ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு முன் எவ்வளவு வந்ததோ என்று தெரியவில்லை.

    விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் தனியாரிடம் கொடுத்து விட்டு அரசு என்ன செய்யப்போகிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×