search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நூல், நெசவு கட்டணம் உயர்வு - துணிகள் தேக்கத்தால் பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

    மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால் சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தது. கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.40 கோடி மதிப்புள்ள 1 கோடி மீட்டர் காடா ஜவுளி துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளித் தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

    இந்தநிலையில் பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நூல் விலை உயர்வு, நெசவு கட்டணம் உயர்வு, விற்பனையாகாமல் துணிகள் தேக்கம் ஆகியவற்றால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. 

    இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

    கடந்த ஆண்டு கொரோனா பொது ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கியது. மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால் சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருந்தது. கொரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. 

    மேலும் தமிழகத்தில் இருந்து ஜவுளிகள் அதிகமாக ஏற்றுமதியாகும் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கால் வடமாநில மொத்த ஜவுளி வியாபாரிகள் ஏற்கனவே துணி ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் இருந்த காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களையும் நிறுத்தி வைத்தனர். 

    ஏற்கனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு இதுவரை பணம் அனுப்பாமலும் உள்ளனர். இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

    தற்போது கொரோனா பொது ஊரடங்கால் 80 சதவீத தொழில் முடங்கிவிட்டது. ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் மட்டுமே தற்போது விசைத்தறிகளை இயக்கி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளது.

    ஜவுளித் தொழிலை காப்பாற்ற உற்பத்தியாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதத்திற்கு வட்டியை தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும். அசல் தொகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். 

    ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். துணி உற்பத்திக்கான மூலதன பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே பஞ்சு இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 

    கடந்த ஆண்டு 20 கவுண்ட் ரகம் ஒரு கிலோ நூல் விலை ரூ.120 ஆக இருந்தது. தற்போது ரூ.145 ஆக மிக கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கழிவு பஞ்சு விலை உயர்ந்து விட்டதால்தான் நூல் விலையை உயர்த்த வேண்டியதாகி விட்டது என்று ஒ.இ.மில் நிர்வாகத்தினர் தரப்பில் கூறுகின்றனர். 

    பஞ்சு மற்றும் நூல் விலை ஒரே சீராக இருந்தால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலும் சீராக நடைபெறும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    விசைத்தறி துணி உற்பத்தி செய்த நிலையில் கொரோனா தொற்று பொது ஊரடங்கால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

    துணி உற்பத்தி செலவை காட்டிலும் குறைவாக துணி மொத்த வர்த்தகர்கள் பேரம் பேசுகின்றனர். பல்லடம் பகுதியில் ரகத்திற்கு ஏற்ப விசைத்தறியாளர்களுக்கு நியாயமான நெசவு கட்டணத்தை துணி உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விசைத்தறியாளர்கள் நெசவு கட்டணத்தை அதிகமாக வழங்க வலியுறுத்துவது நியாயமில்லை. 

    விசைத்தறி தொழிலில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குறைவாக தான் பணியாற்றுகின்றனர். விசைத்தறி கூடங்களில் அதிகமாக வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர். 

    தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். தமிழகத்தை விட வட மாநிலங்களில் துணி உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. 

    இன்றைய சூழ்நிலையில் விசைத்தறியாளர்களுக்கு புதிய நெசவு கட்டணம் உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வழங்க முடியாத நிலைக்கு தொழில் நிலை தள்ளப்பட்டுள்ளது. 

    எனவே நஷ்டத்தை தவிர்க்க விசைத்தறி தொழில் நிலைமை சீராகும் வரை இன்று முதல் ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி கூடங்களுக்கு பாவுநூல் கொடுப்பதை இன்று முதல் நிறுத்தினர்.  

    இந்தநிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களின்  உற்பத்தி நிறுத்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×