search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் 14,662 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நாளையும் 9-ந்தேதியும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 27,003 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98,151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 1,166 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.

    இதில் 2,981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 23 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. அந்த வகையில் 9 மாவட்டங்களில் 23,998 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 79,433 பேர் களத்தில் உள்ளனர்.

    இதில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14,662 இடங்களுக்கு நாளை (6-ந்தேதி) முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றியங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணைநல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம்

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபாத் ஒன்றியங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஒன்றியங்களிலும்,

    திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழபாவூர், மேல நீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த இடங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு என 4 ஓட்டுபோடவேண்டும்.

    இதில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு சுயேட்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. தற்போது ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டு பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், அழியாத மை ஆகியவற்றை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்தும் 100 மீட்டர் தூரத்துக்கு அடையாள கோடு வரையும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    வாக்குச்சாவடி அலுவலர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்கான 13 வகையான பொருட்களுடன் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 17,130 போலீசார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் இன்றே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஒன்றியங்களிலும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநில தேர்தல் ஆணையம் சார்பில் 9 மாவட்டங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த 9 மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா ஒரு மூத்த அதிகாரி வீதம் வட்டார தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 9 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமும் வீடியோ மூலமும் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாரை நிறுத்தி நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை 9 மாவட்ட அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராத வகையில் முன்கூட்டியே நிலைமையை சரி செய்ய வேண்டும்.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் வருகிற 9-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அதன் பிறகு வருகிற 12-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 20-ந்தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள்.


    Next Story
    ×