search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேரன்மகாதேவியில் மழை கொட்டிய காட்சி.
    X
    சேரன்மகாதேவியில் மழை கொட்டிய காட்சி.

    தொடர்மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்வு- சேரன்மகாதேவியில் 106 மி.மீ பதிவு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    நெல்லை:

    வளிமண்டலத்தில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டிவரும் நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையிலும் பல இடங்களில் மழை பெய்தது.

    அதிகபட்சமாக சேரன் மகாதேவியில் 106 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.4 மில்லி மீட்டரும், அம்பையில் 5 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 3.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டரும், கருப்பாநதி பகுதியில் 3.5 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு 47 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது. இதனால் பஜார் பகுதியில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்மழை காரணமாக 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 78.75 அடியாக இருந்தது. அணைக்கு 585.19 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 705.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.24 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.90 அடியாகவும் உள்ளது. தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை 121.75 அடியாக உள்ளது.

    கடனா அணை நீர்மட்டம் 65 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 62.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.14 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. எனவே அணைக்கு வரும் 7 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×