search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சுவேதா கொலை வழக்கில் வாலிபருக்கு 15 நாள் சிறை: தாம்பரம் கோர்ட் உத்தரவு

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மாணவி சுவேதா கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே நேற்று மாணவி சுவேதா ராமச்சந்திரன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த வாலிபரும் தற்கொலைக்கு முயன்றார். லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராமச்சந்திரன் தாம்பரம் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னதாக,

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம், ரவி நகரைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இவரது மகள் பெயர் சுவேதா (வயது 19). இவர் சேலையூர்- அகரம்தென் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்துக்கொண்டே கிழக்கு தாம்பரத்தில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டய படிப்பும் படித்து வந்தார்.

    நேற்று மதியம் 1.30 மணியளவில் மாணவி சுவேதா வழக்கம்போல் குரோம்பேட்டையில் இருந்து கல்லூரிக்கு செல்ல மின்சார ரெயிலில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தார். பின்னர் கிழக்கு தாம்பரம் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள ரெயில்வே குடியிருப்பு அருகே வாலிபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சுவேதா சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரெயில் நிலைய வளாகத்தில் பட்டப்பகலில் மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு, அந்த வாலிபரும் தற்கொலைக்கு முயன்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கழுத்தில் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் ராமச்சந்திரன் (24) என்பதும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த ஆதமங்களத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான ராமச்சந்திரன், மறைமலைநகரில் உள்ள ஒரு கார் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

    மேலும் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் 2019-ம் ஆண்டு சென்னையில் இருந்து எனது சொந்த ஊருக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அதே ரெயிலில் மயிலாடுதுறையில் உள்ள உறவினர்களை பார்க்க சுவேதா தனது தாயாருடன் வந்தார். அப்போது ரெயிலில் வைத்து எங்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் எங்களின் செல்போன் எண்களை பரிமாறிகொண்டோம்.

    அதன்பிறகு நாங்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம். இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்து, காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம். வண்டலூர் உயிரியல் பூங்கா உள்பட பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சுற்றினோம்.

    என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து வந்த நான் கடந்த ஆண்டு படிப்பை முடித்து மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். சுவேதாவும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக பட்டயபடிப்பில் சேர்ந்தார்.

    அங்கு சேர்ந்த பிறகு சில மாதங்களாக சுவேதா என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நான் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோதெல்லாம் சுவேதாவை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. சமீபத்தில் நான் அவரை நேரில் அழைத்து பேசியபோது சுவேதாவின் செல்போனை ஆய்வு செய்தேன்.

    அதில் ஆண் நண்பர் ஒருவரின் எண்ணை பெண் பெயரில் பதிவு செய்து இருந்தார். அந்த எண்ணை தொடர்புகொண்டு நான் பேசியபோது அந்த வாலிபர் சுவேதாவும் நானும் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். நீங்கள் நினைப்பது போல் எங்களுக்குள் ஒன்றுமில்லை என்றார்.

    சுவேதாவிடம் நான் இதுபற்றி கேட்டபோது என்னிடம் அவர் சண்டையிட்டார். நான் பலமுறை எடுத்துக்கூறியும் அவர் கேட்காமல் இவ்வளவு கேவலமான ஆளாக இருக்கிறாய்? எனக் கூறி என்னைவிட்டு விலகிச் செல்ல முயன்றார்.

    நான் எவ்வளவு முறை முயன்றபோதும் சுவேதா என்னை ஏற்க மறுத்தார். சரி இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். அதன்படி தாம்பரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு வா. அங்கு வைத்து பேசிக்கொள்வோம் எனக் கூறினேன்.

    சுவேதாவும் அதற்கு சம்மதித்து அவர் தோழி ஒருவருடன் அங்கு வந்தார். நாங்கள் இருவரும் பேசியபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக காதலித்து விட்டு தற்போது விலகிச்செல்லும்படி கூறுகிறாயே என்னை ஏற்றுக்கொள் என அவரிடம் வற்புறுத்தினேன்.

    ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் தயாராக கொண்டு சென்றிருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தேன். பின்னர் நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கழுத்தை அறுத்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சுவேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராமச்சந்திரனிடம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×