search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பயிற்சி டாக்டர்கள் 2 பேருக்கு கொரோனா

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களாக பணிபுரியும் 2பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குமரி மாவட்டத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரலில் தொடங்கிய பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. மே மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

    இதனையடுத்து அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் முதல் தினசரி தொற்று பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 10 முதல் 30பேர் மட்டுமே தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    நேற்று(22-ந்தேதி) 19பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவிலில் 6பேருக்கும், முன்சிறையில் 5 பேருக்கும், அகஸ்தீஸ்வரம் மற்றும் மேல்புறத்தில் தலா 2 பேருக்கும், தோவாளை, ராஜாக்கமங்கல் மற்றும் குருந்தன்கோட்டில் தலா ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது.

    புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 9பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள், ஒரு சிறுவன் ஆகியோர் அடங்குவர். புதிதாக தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 238ஆக அதிகரித்துள்ளது.

    தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்தபோதிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. நேற்று 4,783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4,764 பேருக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.

    இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களாக பணிபுரியும் 2பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக பயிற்சி டாக்டர்கள் 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
    Next Story
    ×