search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தமிழக ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை - திருப்பூர் பின்னலாடை துறையினர் வரவேற்பு

    நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக உள்ளது. ஏற்றுமதியில் முதன்மை மாநிலம் என்கிற நிலையை அடைவதற்காகவே ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதனால் ரூ.2.13லட்சம் கோடியாக உள்ள தமிழக மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.7.38  லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கைக்கு திருப்பூர் பின்னலாடை துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில்,

    தமிழகத்துக்கு பிரத்தியேக ஏற்றுமதி கொள்கை வகுக்கப்பட வேண்டும் என  ஏ.இ.பி.சி., மற்றும் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) மூலம் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தற்போது கொள்கையை வெளியிட்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதன்மை செயலர் தலைமையில் ஏற்றுமதி மேம்பாட்டு கமிட்டி அமைக்கப்படுகிறது. 

    ஏற்றுமதி துறையினர் தங்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எளிதாக கொண்டுசென்று  தீர்வு காண முடியும். திருப்பூர் ஏற்றுமதி மையமாகி அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி கெள்கைக்கான விளக்கங்கள் விரைவில் வெளியாகும் போது முழுவிவரம் தெரியவரும். இவ்வாறு, அவர் கூறினார்.

    ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், 

    நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக உள்ளது. ஏற்றுமதியில் முதன்மை மாநிலம் என்கிற நிலையை அடைவதற்காகவே ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதானமான பொருட்கள் ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு சிறப்பு சலுகை என பல அம்சங்களை உள்ளடக்கி ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழக மொத்த ஏற்றுமதியில் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் ரூ.54 ஆயிரத்து 390 கோடியாக 24.5 சதவீதமாக உள்ளது. இதில் திருப்பூர் பின்னலாடை துறையின் பங்களிப்பு ரூ. 27 ஆயிரத்து 650 கோடியாக உள்ளது. ஏற்றுமதி கொள்கையால் பின்னலாடை துறை ஏற்றம் பெறும். இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×