search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    திமுகவின் 4 மாத ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரசாரம் செய்வது, முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு செய்வது போன்றவற்றை பணியாக கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டகளாக நடைபெற உள்ளது.

    இது சம்பந்தமாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்டமாக இன்று திருப்பத்தூரில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருப்பத்தூர் வந்தார்.
    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ‘ஓட்டல் ஹீல்ஸில்’ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க செய்யும் தில்லு முல்லுகளை முறியடித்து அ.தி.மு.க.வினர் வெற்றி பெற வேண்டும். தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க பச்சைப் பொய்யை மக்களிடம் தெரிவித்துள்ளது.

    தி.மு.க தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை ஏமாற்றி வருகின்றனர். பச்சைப் பொய்யை கூறி ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்
    மு.க.ஸ்டாலின்
    .

    தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டுகளை பெற பச்சை பொய்யை சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

    அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகம், இலவச சைக்கிள் எல்லாம் வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள மாணவர்கள் கல்வித் தரம் உயர்ந்தது. படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

    நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்றது.

    அதன் அடிப்படையில் தற்போது தி.மு.க அரசு சட்டக்கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளனர். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.

    கிராமப்புற ஏழை மக்களுக்காக அ.தி.மு.க அரசு பசுமை வீடு திட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வீடு கிடைத்தது. கிராம மக்கள் பொருளாதாரம் மேம்பட இலவச கறவை மாடு, ஆடு, விலையில்லா கோழி வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

    அ.தி.மு.க.வினர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும். மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள ஒரே துறை உள்ளாட்சித்துறை தான். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வசதி போன்ற பல அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வினர் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைகள், அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களால் தற்போது ஏற்பட்டுள்ள பயன்களையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள் என்பதை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை நிலத்தை காட்டாமலேயே போய் விட்டார் கருணாநிதி.

    தி.மு.க ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நாங்கள் கொண்டுவந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். தி.மு.க புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. 4 மாத ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரசாரம் செய்வது, முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு செய்வது போன்றவற்றை பணியாக கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க ஆட்சியில் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.

    நான் 4 வருடம் 2 மாதங்கள் முதல்அமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவு வழக்கு போட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை.

    அ.தி.மு.க. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு நல்லது செய்வோம். உழைத்து சொந்த காலில் நிற்பவர்கள் அ.தி.மு.க.வினர்.

    எங்களுக்கு எதைக் கண்டும் பயமில்லை. மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை. அ.தி.மு.க.வினருக்கு அச்சம் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மாணவர்கள் நாங்கள். எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியம்.

    இரவு பகல் பாராமல் மக்களை சந்தியுங்கள். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுங்கள். நன்றாக பணிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள் பிடியுங்கள். திருப்பத்தூர் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிறைவேற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி வீரமணி, நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வேலூர் வந்தார். காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரி அருகே உள்ள பார்ச்சூன் ஐடிசி நட்சத்திர ஓட்டலில் வேலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு (மாநகரம்) வேலழகன் (புறநகர்), பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு வாலாஜா தங்க ராஜா பேலஸ் திருமண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார்.

    இதில் மாவட்ட செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


    Next Story
    ×