search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அடுக்குமாடி குடியிருப்பு மனு பெற பொதுமக்களிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    அடுக்குமாடி வீடு கேட்டு மனு கொடுக்க இடைத்தரகர்கள் மக்களை ஏமாற்றி அழைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிய 3,200 வீடுகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. இதையறிந்து பொதுமக்கள் அடுக்குமாடி வீடு வேண்டுமென மனு கொடுத்து வருகின்றனர். 

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாளில் வாராவாரம் 3,000 பேர் வரை மனு கொடுக்கின்றனர். அதிகாலையிலேய வந்து முகாமிடும் மக்கள் மனுக்களை பதிவு செய்து  நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மனு கொடுக்கின்றனர். திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பலரும் கைக்குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் ஆசைகாட்டி மனுகொடுக்க அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்களிடம் மனுவுக்கு ரூ.300 முதல், ரூ.500 வரை கட்டணமாக பெற்றுக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

    இலவச வீட்டுமனை அல்லது அடுக்குமாடி வீடு வாங்கி கொடுப்பதாக பேசி ரூ.500 ஐ முன் கட்டணமாக பெற்று கொள்கின்றனர். நேரில் அழைத்து வந்து மனு கொடுக்க செய்துள்ளனர். 

    இடைத்தரகர் பேச்சை நம்பி பணம் செலவழித்து பலர் மனு கொடுக்க வருகின்றனர். எனவே மொத்தமாக அழைத்து வந்து வரிசையில் நிற்காமல் மனுக்களை பதிவு செய்ய வருவோரை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர். 

    அடுக்குமாடி வீடு கேட்டு மனு கொடுக்க படிவம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. படிவத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து கொடுக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை தடுத்து விண்ணப்ப எழுத்தர்களை முறைப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×