search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அண்ணா அறிவுரையை பின்பற்றி தமிழக அரசு செயல்படுகிறது- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    தாய்மொழித் தமிழ் மீது தணியாத தாகத்தினை தன் வாழ்நாளில் இறுதி வரை உறுதிகொண்ட பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் தன் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞப் பெருந்தகை அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.9.2021) சென்னை, அண்ணா சாலையிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பேரறிஞர் அண்ணா எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல் உச்சரித்திடும் போதினிலெல்லாம் புதிய சக்தியொன்று பிறந்திடும் நம்முயிர் நெஞ்சினிலே என்றெண்ணி வியந்திடுமளவிற்கு தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்பு செறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைத் தலை நிமிரச் செய்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களென்றால் அதுமிகையில்லை.

    தாய்மொழித் தமிழ் மீது தணியாத தாகத்தினை தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதி கொண்ட பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் தன் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.

    பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் குறுகியதே ஆனாலும், அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்களை தந்திட்டவர்.

    குறிப்பாக ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பேருந்துகள் நாட்டுடமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இருமொழிக் கொள்கை ஆகியன சான்றுகளாகும்.

    குறிப்பாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு- அரசு தலைமைச் செயலகம்’ என மாற்றம், தமிழக அரசின் முத்திரையான கோபுர சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழ்நாடு அரசு’ என மாற்றியதோடு, அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த ‘சத்யமேவே ஜெயதே’ என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு, ‘வாய்மையே வெல்லும்’ என அழகுத் தமிழிலும், மதராஸ் கவர்மெண்ட்-தமிழ்நாடு அரசு எனவும், செக்ரடேரியட் - தலைமைச் செயலகம் எனவும், அசெம்பிளி- சட்டமன்றம் எனவும், ஸ்பீக்கர்- பேரவைத் தலைவர் எனவும், மந்திரி - அமைச்சர் எனவும், கனம் - மாண்புமிகு எனவும், பேரறிஞர் அண்ணாவின் அழகுத் தமிழாம் அமுதத் தமிழில் மாற்றம் கண்டது புது வரலாறு.

    இளைஞர்களின் ஏகோபித்த எழுச்சியினை ஈர்த்திட்ட அவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற புதிய மூன்றெழுத்து மந்திரத்தையும் மக்களின் மனங்களிலே விதைத்தவர். பேரறிஞப் பெருந்தகை அண்ணா முதல் அமைச்சராக  மட்டுமன்றி, ஒரு தேர்ந்த அறிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், தலைசிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும், ஏகோபித்த மக்கள் தலைவராகவும், இன்றும் தமிழ் மக்களால் அவர் நினைவு கூரப்படுவதில் வியப்பில்லை.

    பேரறிஞர் அண்ணாவின் புகழினைப் போற்றிப் பாராட்டிடும் வகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் அவர் கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், எண்ணற்ற அரிய பல திட்டங்களை செயல்படுத்தி அடித்தள மக்களும் ஏற்றம் பெற்றது வரலாறு.

    தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சம சொத்துரிமைச் சட்டம், பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித்தொகை, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவம் பெற கலைஞர் காப்பீட்டுத் திட்டம், பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கடற்கரையில் நினைவிடம், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான அண்ணா நூற்றாண்டு நூலகம் என தான் வாழ்ந்த காலம் வரையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புகழுக்கு பெருமை சேர்த்து, அவரின் நினைவாக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்றைய தமிழகம் இந்தியாவிலேயே பல மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்கிறது.

    பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில், “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதற்கேற்ப முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஐந்து பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி, கொரோனா காலத்தில் மக்களின் துயர்துடைத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களின் தொகுப்பு, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாதாந்திர ஊக்கத்தொகை, மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை “மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று” என்ற பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைக்கேற்ப இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×